விக்ரம் சாராபாய்
இன்று உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது. பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை வர்த்தகரீதியாக விண்ணில் செலுத்தும் வல்லமையையும் நாம் பெற்றிருக்கிறோம். தவிர கண்டம் தாண்டிச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளையும் நாம் உருவாக்கியிருக்கிறோம். இதற்கெல்லாம் மூல காரணமானவர் விண்வெளி விஞ்ஞானியான விக்ரம் அம்பாலால் சாராபாய்.
குஜராத்தின் ஆமதாபாத்தில், 1919, ஆக. 12-இல், செல்வாக்கான சமணக் குடும்பத்தில் பிறந்தவர் விக்ரம் சாராபாய். அவரது தாத்தா குஜராத்தில் மருந்து உற்பத்தி உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை நிறுவியவர். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் குடும்பத் தொழில்களுடன் முடங்கிவிடாமல், கணிதம், இயற்பியல் பாடங்களில் ஏற்பட்ட ஆர்வத்தால், விஞ்ஞான ஆய்வுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார் விக்ரம்.
லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டிரிப்போ பட்டம் பயின்று (1940) நாடு திரும்பிய விக்ரம், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பிரபல விஞ்ஞானி சர்.சிவி.ராமனின் வழிகாட்டலில் அண்டக்கதிர்கள் (Cosmic Rays) தொடர்பாக ஆராய்ச்சி நடத்தினார். 1945-இல் மீண்டும் லண்டன் சென்ற விக்ரம், ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்தார். வெப்ப பிரதேசங்களில் அண்டக் கதிர்களின் தாக்கம் குறித்த ஆய்வு (Cosmic Ray Investigations in Tropical Latitudes) என்ற ஆய்வுக்காக அவர் 1947-இல் டாக்டர் பட்டம் பெற்றார்.
பிறகு நாடு திரும்பிய விக்ரம், தனது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் 1947, நவ. 11-இல் ஆமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory-PRL) நிறுவினார். அங்கு அண்டக் கதிர்கள் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பின்னாளில் இந்தியா விண்வெளித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்த உந்துசக்தி அளித்த மையம் இதுவே.
விக்ரம் சாராபாய், சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, அவர் நிறுவனங்களைக் கட்டமைப்பதில் தேர்ந்தவர். நாட்டின் முக்கியமான பல ஆய்வு நிறுவனங்கள் அவரால்தான் தொடங்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டன.
குஜராத் மாநிலத்திலுள்ள ஜவுளி ஆலைகளின் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்க்க ஆமதாபாத் ஜவுளித் தொழிலக ஆராய்ச்சி சங்கத்தை (ATIRA) 1947-இல் நிறுவிய விக்ரம், 1966 வரை அதை வழிநடத்தினார். இன்று குஜராத் மாநிலம் ஜவுளித் துறையில் சிறந்து விளங்குவதற்கு இந்த அமைப்பின் பின்புலமே காரணம்.
விக்ரம் தொழில் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்ததால், மேலாண்மைத் துறையில் நாம் பின்தங்கி இருப்பதை உணர்ந்தார். அவரது கூட்டு முயற்சியால் ஆமதாபாத்தில் இந்திய மேலாண்மைப் பள்ளி (Indian Institute of Management Ahmedabad-IIMA) 1961-இல் நிறுவப்பட்டது. அதன் முதல் இயக்குநராகவும் விக்ரம் பணியாற்றினார்.
கணிதம், அறிவியலில் மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்கவும், அறிவியல் கல்வியில் புதுமைகளைப் புகுத்தவும், விக்ரமால் சமுதாய அறிவியல் மையம் 1960-இல் ஆமதாபாத்தில் துவங்கப்பட்டது. அது தற்போது விக்ரம் சாராபாய் பெயரில் (VASCSC) அறிவியல் பணிகளை ஆற்றிவருகிறது.
1942-இல் கேரளத்தைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் மிருணாளினியை விக்ரம் திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் இணைந்து ஆமதாபாத்தில் நிறுவிய தர்பண் நிகழ்த்து கலை கல்வி நிறுவனம் இன்றும் கலைகளை வளர்த்து வருகிறது.
கல்பாக்கத்திலுள்ள அதிவேக ஈனுலை (Faster Breeder Test Reactor- FBTR), கொல்கத்தாவிலுள்ள மாறுபடும் ஆற்றல் முடுக்கி திட்டம் (Variable Energy Cyclotron Project), ஹைதராபாத்திலுள்ள இந்திய மின்னணுவியல் நிறுவனம் (Electronics Corporation of India Limited- ECIL), ஜார்கண்ட் மாநிலம், ஜாடுகுடாவிலுள்ள யுரேனியம் உற்பத்தி நிலையம் (Uranium Corporation of India Limited- UCIL) ஆகிய நிறுவனங்கள் விக்ரம் சாராபாயால் நிறுவப்பட்டவை.
இஸ்ரோவின் உதயம்: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, விண்வெளித் துறையில் நாடு வளர வேண்டியதன் அவசியத்தை விக்ரம் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். அவருக்கு மூத்த விஞ்ஞானியான ஹோமி ஜஹாங்கீர் பாபாவும் உறுதுணை புரிந்தார்.
ருஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டதன் தொடர்ச்சியாக உலக நாடுகளில் விண்வெளித் துறை கவனம் பெற்றது. ஆனால் இந்தியா போன்ற ஏழை நாட்டுக்கு இது தேவையில்லை என்று பலர் விமர்சித்தனர். அவர்களுக்கு விக்ரம் சாராபாய் அளித்த பதில் அவரது தொலைநோக்கையும் தேசபக்தியையும் வெளிப்படுத்தியது:
“வளரும் நாடான இந்தியாவுக்கு விண்வெளி ஆராய்ச்சி தேவையா என்று சிலர் கேட்கின்றனர். அதன் பயன்பாட்டில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் போல புதிய நிலவுகளையும் கோள்களையும் கண்டுபிடிக்கும் போட்டியில் இறங்கும் எண்ணம் நமக்கு இல்லை.
ஆனால், நாம் தேசம் என்ற அளவில் மதிப்புடன் திகழ வேண்டுமானால், உலக நாடுகளிடையே நிமிர்ந்து நிற்க வேண்டுமானால், மனித சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் அதிநவீனத் தொழில்நுட்பங்களில் வேறெந்த நாட்டுக்கும் சளைக்காதவர்களாக நாம் இருந்தாக வேண்டும்” என்றார் விக்ரம் சாராபாய்.
விக்ரமின் தளாரா முயற்சியின் பலனாக, இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (Indian National Committee for Space Research-INCoSR) 1962-இல் நிறுவப்பட்டது.
இந்தியாவுக்கென தனித்த ராக்கெட் ஏவுதளம் வேண்டும் என்றும் விக்ரம் சாராபாய் கனவு கண்டார். அவரும் ஹோமி பாபாவும் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் காரணமாக, அரசு அதற்கு சம்மதித்ததுடன் அதர்கான பொறுப்பை விக்ரமிடமே ஒப்படைத்தது.
அதையடுத்து, கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒருபகுதியான தும்பாவில் ராக்கெட் ஏவுதளத்தை (Thumba Equatorial Rocket Launching Station- TERLS) 1963-இல் விக்ரம் அமைத்தார். நிலநடுக்கோட்டுக்கு மிக அருகில் உள்ள இந்த மையம் ராக்கெட்களை ஏவுவதற்கு மிகவும் ஏற்றதாகும். இங்குதான் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விக்ரம் சாராபாயின் கீழ் பணிபுரிந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
1963, நவ. 21-இல் தும்பாவில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.
1969-இல் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாக (Indian Space Research Organisation -ISRO) மாற்றம் பெற்றது. அதன் வளர்ச்சிக்கும், அதில் திறம் மிகுந்த இளம் விஞ்ஞானிகள் இணையவும், அடித்தளமாக விக்ரம் செயல்பட்டார்.
இதனிடையே இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த ஹோமி பாபா 1966-இல் அகால மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அரசின் வேண்டுகோளை ஏற்று அதன் தலைவராகப் பொறுப்பேற்ற விக்ரம், 1971 வரை அதை திறம்பட வழிநடத்தினார். அப்போது அணுசக்தியை பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் நடைமுறைகளை விக்ரம் உருவாக்கினார். பல அணு உலைகள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வேண்டும் என்பது விக்ரமின் பெருங்கனவு. அவரது வழிகாட்டலில் இயங்கிய விஞ்ஞானிகள் குழு, அவரது மறைவுக்குப் பிறகு 1975-இல் முதல் இந்திய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனர்.
இடைவிடாத ஆய்வுப் பணிகள், புதிய விஞ்ஞானக் கட்டமைப்புகளை நிறுவுதல், இளம் விஞ்ஞானிகளை உருவாக்குதல் போன்ற பணிகளில் துடிப்புடன் இயங்கிய விக்ரம் சாராபாய், 1971, டிசம்பர் 30-இல் தனது 52-வது வயதில் காலமானார்.
அவருக்கு பாரத அரசு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1962), பத்மபூஷண் (1966), பத்மவிபூஷண் (1972) ஆகிய விருதுகளை அளித்து கௌரவித்தது. திருவனந்தபுரம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு விக்ரம் சாராபாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அண்டக்கதிர் ஆய்வில் விக்ரம் அளித்த பணிக்காக, நிலவின் அமைதிக்கடல் பகுதியிலுள்ள கருங்குழிக்கு 1973-இல் விக்ரமின் பெயர் சூட்டப்பட்டது.
-தினமணி- இளைஞர்மணி (12.01.2016)
.
Tags: அக்கினிக் குஞ்சுகள், அஞ்சலி, இளைஞர்மணி, தினமணி, வரலாறு
You must be logged in to post a comment.