இந்தியனென்பதும் ஹிந்தென்பதுவும்
.ஒருபொருள் கொண்ட இரு சொற்கள்!
வந்தனம் நாடே, வாழிய மக்கள்!
.என்பது ஹிந்துப் பண்பாடு!
(இந்திய)
பனிமலை தொட்டு பாரதம் விரவி
.குமரியின் வரையில் கொற்றவையே!
தனித்தனி மொழிகள் பேசியபோதும்
.தழைத்திடு ஒற்றுமை மதத்தாலே!.
கங்கை, யமுனை, காவிரி நதிகள்
.புண்ணியமெனவே போற்றுகிறோம்!
இங்குள ஒவ்வொரு மண்ணும் புனிதம்
.என்பது இந்திய நம்பிக்கை!
(இந்திய)
உடைகள் பலவே, உணவுகள் வேறே,
.ஆனால் உள்ளம் இந்தியனாய்!
மடையைப் பிளந்த வெள்ளம் போலே
.மாநில மாயை அழிந்திடுதே!
பல்வகை மதங்கள் கூறும் கொள்கை
.எல்லாமொன்றே, ஏற்கின்றோம்!
அல்லவை தேயும், அறமே பெருகும்
.என்பது இந்திய நம்பிக்கை!
(இந்திய)
நல்வழி ஒன்றை இந்தியர் நாங்கள்
.நாளை உலகுக் களித்திடுவோம்!
வல்லவன் இறைவன்! வாழிய உலகம்!
.என்பது ஹிந்துப் பண்பாடு!
எழுதிய நாள்: 20.07.1991
விஜயபாரதம் (16.10.1998)
Leave a comment