பழைய ஓய்வூதியத் திட்டம் – புதிய சவால்கள்

29 Mar

-பி.எஸ்.எம்.ராவ்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) எதிர்ப்பவர்கள், தங்கள் கடுமையான எதிர்ப்பை பல வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆயினும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதாக  அறிவித்துவிட்டன. இதனை தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்ததால், கர்நாடகமும் தெலங்கானாவும் இதே திசையில் செல்லத் தயாராகி வருகின்றன.

மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் பயனாக ஒவ்வொரு மாநிலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறி வருகின்றன. இதைக் காணும்போது, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனினும் ஓபிஎஸ் திட்டத்திற்கு சில தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செüதரி, மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அளித்த பதில் முக்கியமானது. ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) 2015 மற்றும் 2023 விதிமுறைகளின்படி, ஓபிஎஸ் முறைக்கு மாறும்  மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களிலிருந்து என்பிஎஸ்}சுக்காக செலுத்தப்பட்ட தொகையை ஓய்வூதிய நிதியிலிருந்து திரும்பப் பெற இயலாது என்று அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்த விவகாரத்தை ஆழமாக ஆய்வு செய்வதற்கு முன்னதாக,  பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி சுருக்கமாக நினைவுகூர்வது அவசியம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தைப் பெற்றிருக்கிறார்கள்; முதன்முதலாக 1881இல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அறிமுகம் செய்யப்பட்டது.

அரசு நிறுவனங்களுக்கான அரச ஆணையம் (லீ ஆணையம்) 1924இல் செய்த பரிந்துரையில், இந்தியாவில் ஆங்கிலேய அரசில் பணி புரிந்து ஓய்வு பெறுபவருக்கு, அவர் கடைசி மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதி தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த லீஆணையப் பரிந்துரையை 1935இல் அன்றைய ஆங்கிலேய – இந்திய அரசு சட்டபூர்வமாக அங்கீகரித்தது. அதாவது, நாட்டிலுள்ள அரசு ஊழியர்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதியத்தை (பழைய ஓய்வூதியத் திட்டத்தில்) பெற்று வந்திருக்கிறார்கள்.

ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய பாதுகாப்பு என்ற கண்ணோட்டம் மிக வலுவாக வேரூன்றி இருந்த காலத்தில், இதை மாற்றும் வகையில், 2003 டிசம்பரில் அன்றைய மத்திய அரசு புதிய அறிவிக்கையை வெளியிட்டது. அதன்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு  மாற்றாக புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

அதிலும், 2004 ஜன. 1ஆம் தேதிக்குப் பிறகு பணியில் இணைவோர்  அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டமே அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையைக் குறைக்கவே புதிய திட்டம் கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய ஓபிஎஸ் திட்டத்தின்படி, பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி மாத ஊதியத்தில் பாதித்தொகையை எந்த நிபந்தனையுமின்றி பெற்று வந்தனர். அதற்காக அவர்கள் ஒரு பைசா கூட செலுத்தத் தேவையில்லாத நிலை இருந்தது.

ஆனால் “தேசிய ஓய்வூதிய திட்டம்’ என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட புதிய என்பிஎஸ் திட்டத்தின்படி,  அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் 10 சதவீதம் பங்களிப்புத் தொகையாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகை  ஓய்வூதிய நிதியில் சேர்க்கப்படுகிறது. அத்துடன் இதே அளவு தொகையை அரசும் கூடுதலாக ஓய்வூதிய நிதியில் சேர்க்கிறது. (வேலை வழங்கும் நிறுவனத்தின்  / அரசின் பங்களிப்புத் தொகையானது 14 சதவீதமாக 2019இல் அதிகரிக்கப்பட்டது). அப்போது மேற்கு வங்கம் தவிர்த்து அனைத்து மாநிலங்களும் புதிய திட்டத்தில் இணைந்தன.

இவ்வாறு அரசு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட  (10  %) பங்களிப்புத் தொகையும்,  அரசின் பங்களிப்புத் தொகையும்  (14  %) சேர்ந்த ஒட்டுமொத்த நிதியின் ஒரு பகுதி (மொத்தத்தொகையில் 60 %) அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது பெருந்தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை, (மொத்தத்தொகையில் 40 %) குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதனை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும்.

அதாவது அரசு ஊழியர்கள் எந்த பங்களிப்புத் தொகையும் செலுத்தாதபோதும், ஓய்வூதியம் பெறுவது பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி (ஓபிஎஸ்) அவர்களின் உரிமையாக இருந்தது. பங்களிப்பு இல்லாதபோதும் உறுதியான ஓய்வூதியப் பலன்கள் அவர்களுக்குக் கிடைத்து வந்தன. ஆனால் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) ஊழியர்களின் உறுதியான பங்களிப்பு உள்ளபோதும், உறுதியற்ற ஓய்வூதியப் பலன்களே கிடைக்கின்றன.

இந்த ஒப்பீடுகளிலிருந்து ஓபிஎஸ் தான் என்பிஎஸ்சை விடச் சிறந்தது என்பது தெரிகிறது. எனவேதான் என்பிஎஸ்சுக்கு மாற விருப்பமின்றி அரசு ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆரம்பத்தில் பல்வேறு மாநிலங்கள் என்பிஎஸ்  திட்டத்தை ஆதரித்தபோதும், அரசு ஊழியர்களின் எதிர்ப்பால் சில மாநிலங்கள் பின்வாங்கின. இதைக் கண்ட மத்திய அரசு  ஊழியர்களும்,  என்பிஎஸ் திட்டத்தைக் கைவிடாத மாநிலங்களைச் சார்ந்த அரசு ஊழியர்களும் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக இந்திய ரயில்வே ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு கோரி, வரும் மே 1 முதல் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த என்பிஎஸ் திட்டத்தை மேற்கு வங்கம் ஆரம்பத்திலிருந்தே ஏற்கவில்லை. 2003இல் இதனை ஏற்பதாக அறிவித்த தமிழ்நாடு அரசும், இதை நடைமுறைப்படுத்த இதுவரை முனைப்புக் காட்டவில்லை. இவை குறிப்பிட வேண்டிய தகவல்கள்.

அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் பெறப்போகும் பணப்பயன் என்பதால், அவர்களை மத்திய, மாநில அரசுகளால் சமாதானப்படுத்த முடியவில்லை. ஏனெனில் என்பிஎஸ் திட்டத்தின் பலன்கள் குறைவு. இதை அரசு உணர்ந்திருந்ததால் தான்,   2003 அறிவிக்கையிலேயே,  “”2004 ஜன. 1க்குப் பிறகு பணியில் சேருவோருக்கு மட்டுமே தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) பொருந்தும்” என்று அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய திட்டத்தால் தற்போது (2004இல்)  பணியில் உள்ள எந்த அரசு ஊழியருக்கும் பிரச்னை இல்லை என்பதால் தான், திட்டத்தின் தொடக்கத்தில் எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. என்பிஎஸ்  திட்டத்துக்கு எதிரான போராட்டம் மிகவும் தாமதமாகத் தான் தொடங்கியது; 20 ஆண்டுகள் கழிந்த பிறகே போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.

இப்போது ஓபிஎஸ், என்பிஎஸ் திட்டங்களின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் வாதங்கள், மாற்று வாதங்களைப் பரிசீலிக்கலாம்.

ஓபிஎஸ் மீண்டும் கொண்டுவரப்பட்டால், அரசின் நிதிச்சுமை கூடிவிடும் என்பது அதை எதிர்ப்பவர்களின்  வாதம். “”ஓபிஎஸ் நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசின் ஒட்டுமொத்த நிதிச்சுமை என்பிஎஸ் திட்டத்தில் இருப்பதுபோல 4.5 மடங்கு அதிகரித்துவிடும்” என்று ரிசர்வ் வங்கியின் 2023 செப்டம்பர் ஆய்விதழ் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, 2060களில் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 0.9 சதவீத சுமை கூடுதலாகும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது.

குறைந்தபட்ச  பயனளிப்புகளைக் கொண்ட என்பிஎஸ் திட்டத்தை ரத்து செய்வதை, நீண்டகால ஓய்வூதியம் அளிக்கும் ஓபிஎஸ் திட்டத்துடன் ஒப்பிட்டால் அது பெரும் சுமையாகவும் அரசுகளுக்கு வசதியற்றதாகவும் தான் கருதப்படுகிறது.  ஓபிஎஸ் திட்டத்திற்கு அரசுதான் செலவிட வேண்டியிருக்கும். ஏனெனில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்  ஓய்வூதியம் என்பது அதுவரையிலான ஊழியர்களின் சேவைக்கு அளிக்கப்படும் வெகுமானம் மட்டுமே. இதனால் அரசுக்கு மூலதனச் செலவுகள் அதிகரித்து, அது அரசின் வருவாயிலும் வேலைவாய்ப்புகளிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் இதை எதிர்ப்பவர்களின் வாதம்.

அது மட்டுமல்ல, மனிதர்களின் ஆயுட்காலம் நீடித்து வருவதும், ஓபிஎஸ் திட்டத்தின் சுமையை அதிகரிக்கும் என்பது, அதை எதிர்ப்பவர்கள் சுட்டிக்காட்டும் முக்கியமான கருத்தாகும். உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 2050ஆம் ஆண்டில் 77.2 ஆக இருக்கும் என்பது ஐ.நா.சபை மதிப்பீடாகும்;  இது 2020இல் 72.9 ஆக இருந்தது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் 10 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. அதாவது, அரசு ஊழியர்களின் ஆயுட்காலம் கூடுவதால், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தால் அரசின் சுமை மேலும் கூடும் என்பது எதிர்ப்பாளர்களின் எச்சரிக்கை.

ஓபிஎஸ் திட்டம் முந்தைய காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நல்ல சமூகநலத் திட்டமாக இருந்திருக்கலாம். ஏனெனில் அப்போது நாட்டின் ஒட்டுமொத்த பணியாளர்களில்  அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. அதேசமயம், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் அளிப்பது, நாட்டிலுள்ள பிற தனியார் துறைத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும், ஓபிஎஸ் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இப்போது இந்த வாதங்களில் உள்ள அபத்தத்தைக் காணலாம். நாட்டின் ஒட்டுமொத்தப் பணியாளர்களில் மிகவும் குறைந்த சதவீதமுள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது? அதனால் எப்படி அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படும்? இந்தியாவின் பொருளாதாரம் பல மடங்காக வளர்ந்து வருவதாக மத்திய அரசு கூறுகிறது. மிக விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரப் போகிறோம் என்று அரசு பெருமிதத்துடன் கூறுகிறது.  இத்தகைய நிலையில் மிகவும் குறைந்த சதவீதத்திலான ஓய்வூதியத்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு  சுமை ஏற்படுமா? இவ்வாறு கேட்பவர் பிரபல பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக்.

அது மட்டுமல்ல, அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு ஓய்வூதியம் மறு மதிப்பீடு செய்யப்படாததால், அரசு வழங்கும் ஓய்வூதியத்தால் நிதிச்சுமை கூடாது என்றும் பிரபாத் பட்நாயக் கூறுகிறார். அரசு கூறுவது போல நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்குமானால், ஓய்வூதியச் சுமையின் விகிதாசாரம் மேலும் குறையவே வாய்ப்புள்ளதாக அவர் கருதுகிறார்.

மக்களின் ஆயுட்காலம் கூடுவதால் ஓபிஎஸ் திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறுவோரின் கருணையற்ற மனப்பான்மை, பணம் மட்டுமே பிரதானம் என்ற குறுகிய நோக்கை வெளிப்படுத்துகிறது. குடிமக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதால் ஒரு மக்கள்நல அரசு மகிழ்ச்சி அடைய வேண்டும். அவர்களுக்கு உதவும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதை பொருளாதாரச் சுமையாக ஒரு மக்கள்நல அரசு கருதாது. மூத்த குடிமக்களும் ஓர் அங்கமாக உள்ள நாட்டு மக்களின் நலனை விரும்பும் எந்த அரசும் அதன் பொறுப்பை உணர்ந்து செயல்படும்.

அது மட்டுமல்ல, ஆயுட்கால நீட்டிப்பு வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும். அப்போது மூத்த குடிமக்கள் மரியாதையுடனும் நன்மதிப்புடனும் வாழ வேண்டுமானால், அவர்கள் பொருளாதார சுதந்திரத்துடன், பிறரை எதிர்பார்க்கும் நிலை இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அதற்கு அரசின் ஓய்வூதிய ஆதரவு அவசியம்.

நாட்டின் ஒட்டு மொத்தத் தொழிலாளர்களில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு மிகக் குறைவு என்பதால், நிதிச்சுமையை காரணம் காட்டி, அவர்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய உதவியை அரசு நிறுத்தக் கூடாது. இந்த விஷயத்தில் அரசானது, ஒரு முன்னுதாரண முதலாளியாக (வேலை வழங்கும் நிறுவனம்) செயல்பட வேண்டும். அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கும் கண்ணியமான ஊதியம், ஓய்வூதியம் போன்றவை தான், நாட்டின் பிற தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

அரசு தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுடன் நின்றுவிடக் கூடாது. அரசுத் துறை சாராத கோடிக் கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்து கவலை கொள்ள வேண்டிய கடப்பாடும் அரசுக்கு உண்டு.   தனியார் துறைத் தொழிலாளர்களும் மூத்த குடிமக்களாகும்போது, அவர்கள் சார்ந்த நிறுவனங்களிலிருந்து  ஓய்வூதியம் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு. இதுதொடர்பாக,  சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து முதியோர் தகுதி ஓய்வூதிய திட்டத்தை (டிடிபி ஸ்கீம்) நடைமுறைப்படுத்த அரசு முயல வேண்டும்.

எனவே தொழிலாளர் நலனுக்கான நமது தற்போதைய இலக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதாக மட்டும் இருந்துவிடக் கூடாது. தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களும் இதேபோன்ற ஓய்வூதியத்தைப் பெற வேண்டும் என்பதே நமது இறுதி இலக்காக இருக்க வேண்டும்.

குறிப்பு:
கட்டுரையாளர் பொருளாதார நிபுணர்.

தினமணி (27.03.2024 )

.

Leave a comment