பல்லவி
வல்லமை பெற்றிடுவோம் – பாரில்
வல்லரசாய் எழுவோம்!
நல்லவை புவியில் நிலைத்திட வேண்டின்
நல்லரசாய் அமைவோம்!
அனுபல்லவி
அல்லவை நீக்கிடுவோம் – பாரில்
அறத்தை நாட் டிடுவோம்!
நல்லவை புவியில் நிலைத்திட வேண்டின்
வல்லரசாய் எழுவோம்!
(வல்லமை பெற்றிடுவோம்!)
சரணங்கள்
எண்களை உலகினுக்கே – தந்து
ஏற்றம் அமைத்தவர் நாம்!
விண்ணியல் விதிகளையும் – தந்து
விதியினைச் சமைத்தவர் நாம்! 1
கலகம் இல்லாது – மக்கள்
களிப்பாய் வாழ்ந்திடவே
‘உலகம் ஒருகுடும்பம்’ – என
உரைத்த தேசம் இது! 2
(வல்லமை பெற்றிடுவோம்!)
அன்பினை தவமெனவே – கொண்ட
அருட்கடல் புத்தனையே,
வன்மை தவிர்த்திடவே – உலகின்
வளமெனத் தந்தவர் நாம்! 3
பலமொழி பேசிடுவோர்- ஒன்றாய்ப்
பரவிய பெருமையுடன்,
உலகப் பொதுமறையாம்- குறள்
உரைத்தவர் தேசம் இது! 4
(வல்லமை பெற்றிடுவோம்!)
மறவழி தவிர்த்திடவே – அஹிம்சை
மரபினில் திளைத்தவர் நாம்!
அறவழி ஆயுதத்தை – வலிய
அரணென விளைத்தவர் நாம்! 5
வாழ்வின் பூரணத்தைக் கதையாய்
வழங்கும் காவியங்கள்
சூழ்கடல் உலகினுக்கே தந்து
சுடர்ந்திடும் நாடு இது! 6
(வல்லமை பெற்றிடுவோம்!)
அறம்,பொருள், இன்பமென – வீட்டை
அடையும் வழிமுறையை,
துறவினைப் பெருமையென – கொண்ட
தூய்மையின் மைந்தர்கள் நாம்! 7
பதினெண் புராணங்களும் – சங்கப்
பைந்தமிழ் இலக்கியமும்
நிதியென வேதங்களும் – நித்தம்
நிலைத்திடும் நாடு இது! 8
(வல்லமை பெற்றிடுவோம்!)
பல்கலை வளர்த்தவர்நாம் – மிகப்
பழமையின் காவலர் நாம்!
இல்லற வாழ்வியலை – ஈந்த
இன்புறு மானுடர் நாம்! 9
நலமுறத் திகழ்ந்திடவே – அரும்
நல்லுயிர் போற்றிடவே
பொலிவுறு யோகமுறை தனை
போதித்த நாடு இது! 10
(வல்லமை பெற்றிடுவோம்!)
வற்றா ஜீவநதி போன்ற
வளம்மிகு பண்பாட்டை
கற்றவர் போற்றுகிறார் – அதன்
காரணம் ஆனவர் நாம்! 11
தத்தம் வழிகளிலே சென்றால்
தாமே உய்ந்திடலாம்!
உத்தம மதங்கள்பல – இதனை
உரைத்தநல் தேசம் இது! 12
(வல்லமை பெற்றிடுவோம்!)
வானுயர் ஆலயங்கள்- மலையில்
வடித்தபல் குடைவரைகள்!
கானுயர் வனத்தொகைகள் கொண்ட
கவின்மிகு நாட்டவர் நாம்! 13
எல்லையை மீறாத – யாரையும்
எதிரியாய்க் கருதாத,
நல்லவர் போற்றுகிற தேசம்
நலந்திகழ் பாரதமே! 14
(வல்லமை பெற்றிடுவோம்!)
வித்தகப் பெரும்புகழும் – கலைகள்
விளைந்த நற்குணமும்
அத்தனை நற்பதமும் – நமக்கு
அமைந்தது திருவருளே! 15
இத்தனை அரும்பொருளும் – உலகிற்
கீந்திட வேண்டாமா?
தத்தம் அளித்திடவே – வையத்
தலைமையை ஏற்றிடுவோம்! 16
(வல்லமை பெற்றிடுவோம்!)
குறிப்பு:
வானவில் பண்பாட்டு மையம் நடத்திய பாரதி விழா- 2021 கவிதைப் போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை இது.
அவர்களால் தேர்வு செய்யப்படாத கவிதை.
Leave a comment