ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
(பிறப்பு: 1931, அக்டோபர் 15 – மறைவு: 2015, ஜூலை 27)
.
தென்கோடியில் சேது மண்ணிலே உதித்து
வடகிழக்கே மறைந்த கதிரவன் – மாந்தர்
எல்லோரும் இணையெனச் சொல்கின்ற இஸ்லாத்தில்
இறையருளாலே ஜனித்தவன்! 1
.
இதிகாச ராமனின் பாதங்கள் தழுவிய
இராமேசு வரத்தினில் வளர்ந்தவன் – நாட்டின்
தன்மானம் காத்திட பாலைவனத்திலே
புத்தரைச் சிரித்திட வைத்தவன்! 2
.
மரைக்காயர் குடும்பத்தில் ஜெயினுலாப்தீன் எனும்
மாதவர் பேற்றினால் விளைந்தவன்- தூய
அன்பின் வடிவமாம் ஆஷியம்மாவெனும்
அன்னை உவக்கவே மலர்ந்தவன்! 3
.
கடற்கரை மணலிலே தினமணி விற்று
கல்வியைப் பருகிய மாணவன் – வாட்டும்
கவலையும் வறுமையும் ஓடி ஒளிந்திட
களிப்புறு விஞ்ஞானி ஆனவன்! 4
.
ஏழ்மையை ஏணியாய் எண்ணிய உறுதியால்
ஏற்றம் மிகப்பல கண்டவன் – மக்கள்
எல்லோரும் நலம்பெற அறிவியலே வழி
என்பதைத் தெளிவுற உரைத்தவன்! 5
.
விண்வெளி ஆய்வினில், சந்திர ஆய்வினில்
வியப்புறு வெற்றிகள் கண்டவன் – செவ்வாய்
மண்ணிலும் ஆராயும் தோழர்கள் வெல்லவே
மதிப்புறு திட்டங்கள் சொன்னவன்! 6
.
அணுவியல் துறையிலே தன்னிறைவடைவதே
அடிப்படையானது என்றவன் – ஹோமி
ஜஹாங்கீர் பாபாவும் சாராபாயும்தன்
லட்சிய குருவென வரித்தவன்! 7
.
ஆசான்களுக்கு முன்மாதிரியாக
அக்னிச் சிறகுகள் அசைத்தவன்- இந்திய
இளைஞர்கள் மனதில் வெல்லும் துடிப்புடன்
இனிய கனவுகள் விதைத்தவன்! 8
.
உலகம் வியந்திட தாய்த் திருநாட்டின்
தலைமகனாக உயர்ந்தவன் – பெரும்
ஏவுகணைகளும் செயற்கைக்கோள்களும்
எப்போதும் கருத்தினில் கொண்டவன்! 9
.
அப்துல்கலாம் என்று சொன்னாலே தித்திக்கும்
அற்புத நினைவென வாழ்ந்தவன் – என்றும்
தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து
துறவுக்கு இலக்கணம் அளித்தவன்! 10
.
வலிமைதான் உலகினில் மதிப்புறும் என்பதால்
வல்லமை வேண்டித் துடித்தவன் – ஊக்கம்
எப்போதும் நல்கிடும் வாழ்க்கையே சரிதமாய்
நல்கிய நம்பிக்கை நாயகன்! 11
.
மாபெரும் ஞானியர் பரம்பரை தன்னிலே
மங்காத புகழுடன் இணைந்தவன் – பார்
உய்ந்திட நல்வழி காட்டிய பாதையில்
துணையென வரும் உயர் மானுடன்! 12
.
-தினமணி- கலாம் மலர்-2015
Leave a comment