உயர் மானுடன்!

15 Oct

THE PRESIDENT DR APJ ABDUL KALAM ADDRESSED THE NATION ON THE EVE OF INDEPENDENCE DAY ON AUGUST 14, 2006.RB PHOTO

 ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

(பிறப்பு: 1931, அக்டோபர் 15 – மறைவு: 2015, ஜூலை 27)

.

தென்கோடியில் சேது மண்ணிலே உதித்து

வடகிழக்கே மறைந்த கதிரவன் – மாந்தர்

எல்லோரும் இணையெனச் சொல்கின்ற இஸ்லாத்தில்

இறையருளாலே ஜனித்தவன்!                              1

.

இதிகாச ராமனின் பாதங்கள் தழுவிய

இராமேசு வரத்தினில் வளர்ந்தவன் – நாட்டின்

தன்மானம் காத்திட பாலைவனத்திலே

புத்தரைச் சிரித்திட வைத்தவன்!                        2

.

மரைக்காயர் குடும்பத்தில் ஜெயினுலாப்தீன் எனும்

மாதவர் பேற்றினால் விளைந்தவன்- தூய

அன்பின் வடிவமாம் ஆஷியம்மாவெனும்

அன்னை உவக்கவே மலர்ந்தவன்!                  3

.

கடற்கரை மணலிலே தினமணி விற்று

கல்வியைப் பருகிய மாணவன் – வாட்டும்

கவலையும் வறுமையும் ஓடி ஒளிந்திட

களிப்புறு விஞ்ஞானி ஆனவன்!                        4

.

ஏழ்மையை ஏணியாய் எண்ணிய உறுதியால்

ஏற்றம் மிகப்பல கண்டவன் – மக்கள்

எல்லோரும் நலம்பெற அறிவியலே வழி

என்பதைத் தெளிவுற உரைத்தவன்!              5

.

விண்வெளி ஆய்வினில், சந்திர ஆய்வினில்

வியப்புறு வெற்றிகள் கண்டவன் – செவ்வாய்

மண்ணிலும் ஆராயும் தோழர்கள் வெல்லவே

மதிப்புறு திட்டங்கள் சொன்னவன்!             6

.

அணுவியல் துறையிலே தன்னிறைவடைவதே

அடிப்படையானது என்றவன் – ஹோமி

ஜஹாங்கீர் பாபாவும் சாராபாயும்தன்

லட்சிய குருவென வரித்தவன்!                     7

.

ஆசான்களுக்கு முன்மாதிரியாக

அக்னிச் சிறகுகள் அசைத்தவன்- இந்திய

இளைஞர்கள் மனதில் வெல்லும் துடிப்புடன்

இனிய கனவுகள் விதைத்தவன்!                   8

.

உலகம் வியந்திட தாய்த் திருநாட்டின்

தலைமகனாக உயர்ந்தவன் – பெரும்

ஏவுகணைகளும் செயற்கைக்கோள்களும்

எப்போதும் கருத்தினில் கொண்டவன்!      9

.

அப்துல்கலாம் என்று சொன்னாலே தித்திக்கும்

அற்புத நினைவென வாழ்ந்தவன் – என்றும்

தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து

துறவுக்கு இலக்கணம் அளித்தவன்!           10

.

வலிமைதான் உலகினில் மதிப்புறும் என்பதால்

வல்லமை வேண்டித் துடித்தவன் – ஊக்கம்

எப்போதும் நல்கிடும் வாழ்க்கையே சரிதமாய்

நல்கிய நம்பிக்கை நாயகன்!                            11

.

மாபெரும் ஞானியர் பரம்பரை தன்னிலே

மங்காத புகழுடன் இணைந்தவன் – பார்

உய்ந்திட நல்வழி காட்டிய பாதையில்

துணையென வரும் உயர் மானுடன்!             12

.

-தினமணி- கலாம் மலர்-2015

Leave a comment