விஸ்வகர்மா திட்டம்: ஒரு பார்வை

17 Sep

-பி.எஸ்.எம்.ராவ்

கைவினைக் கலைஞர்களின் குலதெய்வ வழிபாட்டு தினமான விஸ்வகர்மா ஜெயந்தி செப். 17இல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், கைவினைத் தொழிலாளர்கள், கலைஞர்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்குகிறது.  கைவினைத் தொழிலாளர்கள் மிகுந்த இதர பிற்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வாக்குகளை பெருமளவில் கவர இத்திட்டம் உதவும் என்று மோடி அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

நாட்டு மக்கள்தொகையில் 52 % பங்கு வகிக்கும் ஓபிசி வகுப்பினரின் ஆதரவைப் பெறுவது, விரைவில் நடைபெற உள்ள மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், அடுத்த ஆண்டு நிகழ உள்ள  மக்களவைத் தேர்தலிலும் பயனளிக்கும் என்பது பாஜகவின் நம்பிக்கை.

ஆனால் இத்திட்டத்தின் பயனாளிகளிடம் முறையாகவும் விரிவாகவும் திட்டம் சென்று சேரும்போதுதான், இவர்களது எண்ணம் நிறைவேறுமா என்பது தெரியவரும். அடுத்ததாக, இதுபோன்ற திட்டங்கள் வாக்குகளாக மாறும் என்பதே அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பாக இருப்பதை நாம் கண்டு வருகிறோம்.

2023-24 ஆம் ஆண்டு முதல் 2027-28 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொழிற்பிரிவினர் மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அவர்கள் தேர்தலுக்கு முன்னதாகப்  பெறும் பயன்கள் குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. இத்திட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கையே ஆட்சியிலுள்ள கட்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

இந்நிலையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை மேல்மட்ட அளவிலும் அடிமட்ட அளவிலும் ஆய்வு செய்தபோது, இத்திட்டம்  எண்ணிக்கை ரீதியாகவோ, தரத்தின் அடிப்படையிலோ பெரும் பயன்களை அளிப்பதுபோலத் தெரியவில்லை.  ஓபிசி பிரிவினரிடையே மத்திய அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் பலத்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், இலக்குப் பயனாளிகளையோ, வாக்காளர்களையோ இத்திட்டம்  வசீகரிப்பது கேள்விக்குறி தான்.

முதலில் இத்திட்டத்தின் பரந்த தன்மையைக் கவனிப்போம்.  இத்திட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அளவு ரூ. 13,000 கோடி. அதாவது ஓராண்டுக்கு அரசு ஒதுக்கீடு ரூ. 2,600 கோடி மட்டுமே. அனைத்து ஊரக, நகர்ப்புறப் பகுதிகளிலும் உள்ள கைவினைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தொகை, நாட்டிலுள்ள மொத்த ஓபிசி பிரிவினரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகவும் சொற்பம்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சியும் மானியக் கடனுதவியும் பெறுவதற்கு 18 தொழிற்பிரிவினர் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்கள்: 1. மரத் தச்சர்கள், 2. படகு செய்பவர்கள், 3. ஆயுதம் செய்பவர்கள், 4. இரும்புக் கொல்லர்கள், 5. கருவிகளை உருவாக்குபவர்கள், 6. பூட்டுத் தொழிலாளிகள், 7. பொற்கொல்லர்கள், 8, குயவர்கள், 9. சிற்பிகள், கல்லுடைப்பவர்கள், 10. காலணித் தொழிலாளிகள், 11. கட்டடத் தொழிலாளிகள், 12. கூடை முடைபவர்கள், கயிறு திரிப்பவர்கள், துடைப்பம் உற்பத்தியாளர்கள், 13. பொம்மை தயாரிப்பாளர்கள், 14. நாவிதர்கள், 15. மலர் அலங்காரப் பணியாளர்கள், 16. சலவைத் தொழிலாளர்கள், 17. தையல் தொழிலாளர்கள், 18. மீன்வலை தயாரிப்பாளர்கள்.

இப்பட்டியலில் தேவையை உத்தேசித்து பின்னாளில் மேலும் சில பிரிவினர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். அதையடுத்த இரு நாட்களில் மத்திய அமைச்சரவை இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தது.

சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், “வரும் நாட்களில் விஸ்வகர்மா ஜெயந்தியின்போது ஒரு புதிய திட்டத்தை அரசு தொடங்க இருக்கிறது. இத்திட்டம், பாரம்பரியக் கைவினைஞர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். குறிப்பாக ஓபிசி பிரிவினருக்கு  இத்திட்டம் பயனளிக்கும். நெசவாளர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், நாவிதர்கள் போன்ற கைவினைத் தொழிலாளர் குடும்பங்களின் மேம்பாட்டுக்கு  விஸ்வகர்மா திட்டம் பெருமளவில் உதவும். இதற்கென ரூ. 13,000 கோடி முதல் ரூ. 15,000 கோடி வரை செலவிடப்படும்” என்றார்.  எனினும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்ட நெசவாளர்கள், விஸ்வகர்மா  திட்டத்தில்  பயன்பெறும் 18 வகையான கைவினைஞர்களின் முதல் பட்டியலில் இல்லை.

“இத்திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்; முதல் ஆண்டில் மட்டும் 5 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்” என்று, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார். இதிலிருந்து இத்திட்டத்தின் அளவு மிகச் சிறிதே என்பது புலப்படுகிறது. மொத்தத்தில் அதிக அளவு நிதியுதவி செய்யப்படாத எந்தத் திட்டமும் பெரும் பலனை அளிக்கும் என்று எதிர்பார்ப்பது  பொருத்தமற்றது. இது ஏற்கெனவே தடுமாற்றத்தில் இருக்கும் ஓபிசி பிரிவினரைக் கைதூக்கிவிட போதுமானதல்ல.

தவிர, நாட்டிலுள்ள கைவினைத் தொழிலாளர்களாகக் கணக்கிடப்பட்ட 70 லட்சம் குடும்பங்களில் பாதி அளவுக்கே இத்திட்டம் ஐந்தாண்டுகளில் சென்று சேர உள்ளது. அதேசமயம், அதிகாரபூர்வமற்ற கைவினைக் கலைஞர்களின் எண்ணிக்கை 20 கோடி ஆகும். இதனைக் கருத்தில் கொண்டால், இந்த மொத்த எண்ணிக்கையில் 3.5 % கைவினைஞர்களே இத்திட்டத்தால் பயனடைவார்கள். அதாவது கைவினைத் தொழிலாளர்களில் சுமார் 96.5 % பேர் இத்திட்டத்தால் அதிருப்தி அடையவே வாய்ப்புள்ளது.

இப்போது இத்திட்டத்தின் அடிமட்ட அளவிலான செயல்பாட்டு முறையைப் பார்க்கலாம். இத்திட்டத்தில் தேர்வாகும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு திறன்சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். அந்த நாட்களுக்கு தினசரி பயிற்சி ஊதியமாக ரூ. 500 வழங்கப்படும். அவர்களுக்கு கைவினைத்தொழில் சார்ந்த கருவிகள் வாங்குவதற்கு ரூ. 15,000 நிதியுதவியும் அளிக்கப்படும்.

இப்பயிற்சி பெற்ற கைவினைஞர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா திட்டச் சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப்படும். அதையடுத்து அவர்களுக்கு 5 % குறைந்த வட்டிவிகிதத்தில் ரூ. 2 லட்சம் மானியக் கடனுதவி மத்திய அரசால் வழங்கப்படும். இதில் வட்டிவிகிதக் குறைப்பு அல்லாது மூலதன மானியம் வேறு ஏதேனும் அளிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.

இந்த ரூ. 2 லட்சம் கடனும் ஒரே தவணையில் அளிக்கப்படாது. முதலில் ரூ. ஒரு லட்சம் கடனுதவி அளிக்கப்படும். அதைக் கொண்டு கைவினைஞர் மேற்கொள்ளும் தொழிலின் மேம்பாடும், கடனைத் திருப்பிச் செலுத்தும் அவரது சிரத்தையும் கவனத்தில் கொள்ளப்பட்டு, மீதமுள்ள ரூ. ஒரு லட்சம் இரண்டாம் தவணையாக வழங்கப்படும். இத்திட்டப் பயனாளிகளுக்கு சந்தையில் விற்பனை உதவியும், எண்மப் பரிமாற்றத்தில் ஊக்கத்தொகையும் அளிக்கப்படும்.

இதுவே இத்திட்டத்தின் அடிப்படைச் செயல்முறை. நாட்டில் பின்தங்கியுள்ள மக்களை சரியாகக் கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கென புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்திருப்பதிலிருந்து, அவர்களின் முக்கியத்துவம் தெரிகிறது. எனினும் மிக முக்கியமான கைவினைத் தொழில் துறைகளைக் கண்டறிவதிலும் அப்பிரிவினர் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதிலும் அரசு சரியான கவனம் கொடுக்கவில்லை.

நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கைத்தறி நெசவும் கைவினைத் தொழில்களும் தான் அதிக அளவிலான வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. குறிப்பாக குடிசைத் தொழில் துறையில் 23.77 லட்சம் கைத்தறிகளுடன் பெரும் பங்களிப்பது கைத்தறி நெசவு தான்.

2019-20இல் எடுக்கப்பட்ட நான்காவது கைத்தறி நெசவாளர்கள் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதிலும் 31,44,839 கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் இருந்துள்ளன. இது உண்மையிலேயே கைவினைத் தொழிலாளர்களில் மிகப் பெரும் எண்ணிக்கை என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. ஆனால், இவர்கள் பெறும் ஊதியம் வாழ்வாதாரத்துக்கு ஏற்றதாக இல்லாமல், மிகவும் சொற்பமாக இருக்கிறது.

இந்த கைத்தறி நெசவாளர் குடும்பங்களில் 67.1 % பேர் மாதந்தோறும் ரூ. 5,000 சம்பாதிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இவர்களில் 26.2 %  பேர் ரூ. 5,000   முதல் ரூ. 10,000 வரை மாத ஊதியமாகப் பெறுகிறார்கள்; சுமார் 1.2 %  பேர் மட்டுமே ரூ. 20,000க்கு மேல் பெறுகிறார்கள்.

நாட்டிற்கு பெருமளவில் அந்நியச் செலாவணி ஈட்டித் தருவதில் கைத்தறியும் கைவினைப் பொருட்களும் பிரதான இடம் வகிக்கின்றன. உதாரணமாக, 2021-2இல் கைத்தறித் துணிகளின் ஏற்றுமதி மூலமாக 6.3 பில்லியன் டாலர்களும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 52,277 கோடி) , கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி மூலமாக 2.1 பில்லியன் டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ. 17,426 கோடி) அந்நியச் செலாவணியாகக் கிடைத்துள்ளன.

  கைவினைத் தொழிலைப் பொருத்த வரை பாரம்பரியமான குரு} சீட பரம்பரையின் நீட்சியாகவே இருக்கிறது. இதனை வலுப்படுத்த அரசு நினைப்பது நல்ல யோசனையே. ஆனால் கைவினைப் பொருட்களின் தரமும் விலையும் நவீனத் தொழிலகத்தில் உற்பத்தியாகும் பொருட்களுடன் போட்டியிடத்தக்க வகையில் இல்லை என்பது நடைமுறை பலவீனமாக இருக்கிறது. இதனை அரசு உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

இன்றும்கூட பெருமளவிலான தொழிலாளர்கள் கைவினைக் கலைஞர்களாகத் தொடர்வது, அத்தொழில் மீதான நேசத்தால் அல்ல.  உண்மையில் அவர்களுக்கு அதைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது என்பதாலேயே அவற்றைத் தொடர்கிறார்கள். மிகவும் குறைந்த வருமானம் தந்தாலும், வேறு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் காரணமாகவே இத்துறையில் அவர்கள் நீடிக்கிறார்கள்.

கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு நவீனக் கல்வி அளிக்கவே விரும்புகிறார்கள். அப்போதுதான் தற்போதைய நவீன பொருளாதார உலகில் நல்ல வேலைக்குச் சென்று மரியாதையான வருமானத்தை ஈட்டி மதிப்பாக வாழ முடியும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கர்ம விதிப்படியான கஷ்டமான வாழ்க்கை தங்களுடன் முடிந்துபோய்விட வேண்டும்; குறைந்த வருமானம், நவீனக் கல்வி பெற இயலாதது போன்ற தங்கள் பலவீனங்கள் குழந்தைகளுக்கும் வாய்த்துவிடக் கூடாது என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.

இந்த அடிப்படைச் சிக்கலை அறியாமல், அதனைச் சரிசெய்யாமல், அரசு மேற்கொள்ளும் புற உதவிகளால் எந்தப் பயனும் விளையாது.
இதற்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்ட கைத்தறி, கைவினைப்பொருட்கள் அபிவிருத்தித் திட்டங்களை சற்றே எண்ணிப் பாருங்கள். காதி கிராம உத்யோக் ஆணையம்,  தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், திறன்மிகு இந்தியா  இயக்கம் போன்றவை நல்ல முறையில் பயனளித்திருந்தால், தற்போதைய விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கவே வேண்டியதில்லை. நாட்டின் தற்போதைய தேவை மக்களை மேம்படுத்தக் கூடிய உறுதியான திட்டங்களே.

  • நன்றி: தினமணி (16.09.2023)
  • திரு. பி.எஸ்.எம்.ராவ், பொருளாதார நிபுணர்.

.

One Response to “விஸ்வகர்மா திட்டம்: ஒரு பார்வை”

  1. Balaji A September 17, 2023 at 10:47 AM #

    நல்ல பரிசீலனை. எனது பார்வையில் எந்த ஒரு பெரிய முதலுக்கு முன்னால் ஒரு சோதனை ஓட்டம் தேவை. இது சோதனை ஓட்ட முதலீடு மாதிரி கருத்தில் கொள்ள வேண்டும். சோதனை ஓட்ட வெற்றியில் பெரிய முதலீடு செய்யலாம். காதியும் மற்றவையும் பலன் கொடுக்காததும் இதனால்தான். அரசியல் விடுத்து பொருளாதார பார்வையில் வல்லுனர்களை கொண்டு வந்தால் இதில் தன்னிறைவு காணமுடியும்

    Like

Leave a comment