இந்த மண்ணில் ஸ்ரீராமன் நடந்தான்.
இந்தத் தமிழ் மண்ணில் தான்
இதிகாச ராமன் நடந்தான்.
.
பிரிய மனைவியைத் தேடி அலைகையில்
அவன் சிந்திய கண்ணீர்த் துளிகளால்
ஈரமானது இந்த மண்.
.
அரக்க வேந்தனால் வீழ்த்தப்பட்ட
பறவைராஜனுக்கு சிரார்த்தம் செய்ய
அவன் நீர் தெளித்தது இந்த மண்ணில்தான்.
.
குரங்கரசனின் மனைவியை மீட்க,
அவன் தொடுத்த அம்பால்
குருதியிலாடியதும் இந்த மண்தான்.
.
சிரஞ்சீவி அனுமனின் அற்புத சாகசங்கள்
இந்த மண்ணில்தான்
பல இடங்களில் நிகழ்ந்தன.
.
தசரத ராமனின் உத்தரவுக்குப் பணிந்து
கடலரசன் அடங்கிய அதிசயம்
நிகழ்ந்ததும் இதே மண்ணில் தான்.
.
இந்த மண்ணில்தான்
அரக்க வேந்தனின் இளையவன்
ராகவனிடம் சரணாகதி அடைந்தான்.
.
இந்த மண்ணிலிருந்து தான்
அரக்க வேந்தனுக்கு
ரகுகுல திலகன் தூது அனுப்பினான்.
.
இந்த மண்ணிலிருந்து தான்
இலங்கைத் தீவுக்கு கடல் மீது
குரங்குப்படை பாலம் அமைத்தது.
.
இந்த மண்ணில்தான்
சேது பந்தன சேவை செய்த
அணிலை அவன் தடவிக் கொடுத்தான்
.
இந்த மண்ணில்தான்
சீதை பிடித்து வைத்த
சிவலிங்கம் வீற்றிருக்கிறது.
.
இந்த மண்ணில்தான்
அசுரக் கொலைப் பாவம் நீங்க
கோசலைமைந்தன் யாகம் வளர்த்தான்.
.
இந்த மண்ணிலிருந்துதான்
புஷ்பக விமானத்தில்
அயோத்தி திரும்பினான் சீதாராமன்.
.
ராமனின் நினைவுகளால் பண்பட்ட மண்-
ராமன் புகழ்பாடும் ஆன்மிக மண்-
ராமனுக்கு ஆதாரமான தெய்வீக மண் இது.
.
நெற்றியில் திருமண் சூடும்போதெல்லாம்
இந்த நினைவு உடன் இருக்கட்டும்!
ஸ்ரீராமனின் வில் நமக்கு
என்றும் துணை நிற்கட்டும்!
.
-விஜயபாரதம் (2021)
Leave a comment