ஸ்ரீராமனின் மண்!

25 Feb

 

இந்த மண்ணில் ஸ்ரீராமன் நடந்தான்.

இந்தத் தமிழ் மண்ணில் தான்

இதிகாச ராமன் நடந்தான்.

.

பிரிய மனைவியைத் தேடி அலைகையில்

அவன் சிந்திய கண்ணீர்த் துளிகளால்

ஈரமானது இந்த மண்.

.

அரக்க வேந்தனால் வீழ்த்தப்பட்ட

பறவைராஜனுக்கு சிரார்த்தம் செய்ய

அவன் நீர் தெளித்தது இந்த மண்ணில்தான்.

.

குரங்கரசனின் மனைவியை மீட்க,

அவன் தொடுத்த அம்பால்

குருதியிலாடியதும் இந்த மண்தான்.

.

சிரஞ்சீவி அனுமனின் அற்புத சாகசங்கள்

இந்த மண்ணில்தான்

பல இடங்களில் நிகழ்ந்தன.

.

தசரத ராமனின் உத்தரவுக்குப் பணிந்து

கடலரசன் அடங்கிய அதிசயம்

நிகழ்ந்ததும் இதே மண்ணில் தான்.

.

இந்த மண்ணில்தான்

அரக்க வேந்தனின் இளையவன்

ராகவனிடம் சரணாகதி அடைந்தான்.

.

இந்த மண்ணிலிருந்து தான்

அரக்க வேந்தனுக்கு

ரகுகுல திலகன் தூது அனுப்பினான்.

.

இந்த மண்ணிலிருந்து தான்

இலங்கைத் தீவுக்கு கடல் மீது

குரங்குப்படை பாலம் அமைத்தது.

.

இந்த மண்ணில்தான்

சேது பந்தன சேவை செய்த

அணிலை அவன் தடவிக் கொடுத்தான்

.

இந்த மண்ணில்தான்

சீதை பிடித்து வைத்த

சிவலிங்கம் வீற்றிருக்கிறது.

.

இந்த மண்ணில்தான்

அசுரக் கொலைப் பாவம் நீங்க

கோசலைமைந்தன் யாகம் வளர்த்தான்.

.

இந்த மண்ணிலிருந்துதான்

புஷ்பக விமானத்தில்

அயோத்தி திரும்பினான் சீதாராமன்.

.

ராமனின் நினைவுகளால் பண்பட்ட மண்-

ராமன் புகழ்பாடும் ஆன்மிக மண்-

ராமனுக்கு ஆதாரமான தெய்வீக மண் இது.

.

நெற்றியில் திருமண் சூடும்போதெல்லாம்

இந்த நினைவு உடன் இருக்கட்டும்!

ஸ்ரீராமனின் வில் நமக்கு

என்றும் துணை நிற்கட்டும்!

.

-விஜயபாரதம் (2021)

Leave a comment