கவிதைக்கு தலைப்பெதற்கு?
கவிதையே வார்த்தையாக இருக்கும்போது
தனி வார்த்தைத் தலைப்பெதற்கு?
எழுத்துகளை வார்த்தையாக்கி
வார்த்தைகளைப் பத்தியாக்கி
பத்திகளைப் பக்கங்களாக்கி
பக்கங்களை நூல்களாக்கும்
வித்தகக் கவிஞருக்கு
பெயரும் எதற்கு?
.
அவர் எழுதுவதெல்லாம் கவிதைகள்.
அவர் தும்மினாலும் கூட.
அவர் எழுதாமல் உள்ளத்தில்
ஒளித்து வைத்திருப்பவையும் கவிதைதான்.
எழுதியனவைப் போலவே எழுதாதவையும்
புரியப் போவதில்லை என்பதனால் அல்ல;
புரியும் வார்த்தைகள் கவிதை அல்ல
என உணர்ந்த முக்கால ஞானி
அல்லவா அவர்?
.
என்ன எழுதினாலும்,
எப்போது எழுதினாலும்
எங்கே எழுதினாலும்
எதனை எழுதினாலும்
கவிதையாக அவரருகே வந்து
காத்து நிற்கும் வார்த்தைகள்.
எழுதாதபோது?
வேதனையில் விம்மித் துடிக்கும்
வார்த்தைகளின் மௌனம்
செவிடர்களுக்குக் கேட்பதில்லை.
.
Leave a comment