எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய நூல்…

5 Dec

எழுத்தாளரின் சமுதாய உணர்வே அவரது எழுதுகோல் நுனியில் பிறக்கும் எழுத்துகளாகிறது என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் இலங்குகிறது. நம்மை அடிமைப்படும் கைப்பேசிகள் குறித்த கவலையாகட்டும், சிறுவர் இலக்கியம் கவனத்தைப் பெறாமல் இருப்பது குறித்த வேதனையாகட்டும், நூலாசிரியர் தக்க சான்றுகளுடன் நம்மைச் சிந்திக்கத் தூண்டுறார்.

கரோனா தீநுண்மித் தொற்றுக் காலத்தில், கல்லூரிப் பேராசிரியரான கிருங்கை சேதுபதி,  தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் எழுதிய 24 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கல்வியாளரான நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலம் பக்கந்தோறும் விகசிக்கிறது.

திருக்குறளில் இவருக்கு இருக்கும் பற்றும் தெளிவும் கட்டுரைகள் தோறும் பளிச்சிடுகின்றன. மகாகவி பாரதி, வள்ளலார் மீதான இவரது பக்திக்கு உதாரணமாக அவர்களைப் பற்றிய கட்டுரைகள் விளங்குகின்றன. இவை அனைத்தையும் விட, மனதை வருடும் சொல்லாட்சியுடன் இனிய சொற்பெருக்காக எழுத்துநடை அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

பெண்ணின் சிறப்பு கற்பு என்று சொன்ன வள்ளுவர் ஆணின் சிறப்பு சால்பு என்று கூறியுள்ளதை குறள்வழியே பதிவு செய்துள்ள ஆசிரியரின் நூலறிவு வியக்கச் செய்கிறது (பக். 75, 76). அதேபோல பழைய நூல்களைப் பேண வேண்டும் (கட்டுரை- 12), உண்மையல்லாதவற்றைப் பரப்பக் கூடாது (கட்டுரை- 17), எதையும் காலத்தாற் செய்ய வேண்டும் (கட்டுரை- 16), நமது கடமைகள் என்ன (கட்டுரை-18), தனிமனித ஒழுக்கமும் பொதுமனித அறமும் (கட்டுரை-14) போன்ற கட்டுரைகள் நமது அறிவுக்கு விருந்தாகின்றன.

மறைந்த தமிழறிஞர் ஔவை நடராஜன் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். “திரு.வி.க. சாயலில் கிருங்கை சேதுபதியின் கட்டுரைகளில் எளிமை, இனிமை, செழுமை செறிவு ஒளிவீசக் காணலாம்” என்று அவர் கூறியிருப்பது வசிஷ்டர் வாயால் விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்றதற்கு சமம்.

தினமணி துணை செய்தி ஆசிரியர் ராஜ்கண்ணன் வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். “தேவையற்ற விவரிப்புகளோ வருணனைகளோ இல்லாது, சொல்ல வேண்டிய செய்திகளை மட்டும் சொல்லிச் செல்லும் பொருள் பொதிந்த கட்டுரைகள் இவை” என்று அவர் கூறியிருப்பது மிகவும் பொருத்தம்.

தன்னுயிர் போல மன்னுயிர் யாவையும் கருதிப் பேணும் தண்மையினால் தான் இவ்வையம் தழைக்கிறது என்கிற உண்மையை எடுத்துக் கூறவே இந்நூலை எழுதியிருப்பதாக நூலாசிரியர் முகவுரையில் கூறுவது, நூலின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிறது. எழுத்துநயம் மேம்பட தமிழ் எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய நூல் இது.

***

உண்மை நின்றிட வேண்டும்
கிருங்கை சேதுபதி

160 பக்கங்கள், விலை: ரூ. 150-

வெளியீடு: முல்லை பதிப்பகம்,
323/10, கதிரவன் காலனி,
அண்ணாநகர் மேற்கு,  சென்னை- 40
கைப்பேசி எண்: 98403 58301

.

Leave a comment