பொன்நெல்லி மழை பொழிக!

23 Oct

மாலவன் நெஞ்சினினிலே-பூ
மாலையாய்த் தவழ்ந்திருப்பாள்- நல்
நீலமா விழியருள- பொன்
நெல்லி மழை பொழியும்!
.
ராகவன் வில்லினுக்கே-தன்
வாழ்வினை அளித்தவளாம் -வை
தேகியின் விழியருள- பொன்
நெல்லி மழை பொழியும்!
.
கண்ணனின் தோளினிலே- முத்
தாரமாய் வீற்றிருப்பாள்- ராதை
தண்ணருள் விழியருள – பொன்
நெல்லி மழை பொழியும்!
.
மன்னவன் நாரணனின்-புய
மார்பினில் ஒடுங்கியவள்- எம்
அன்னையின் விழியருள – பொன்
நெல்லி மழை பொழியும்!
.
வாசனின் இதயமென-நிதம்
வசிப்பவள் ஸ்ரீதேவி- வேல்
வீசிடு விழியருள – பொன்
நெல்லி மழை பொழியும்!
.
சங்கரன் தோத்திரத்தால்- மகிழ்
வெய்திய அலைமகள்- நண்
மங்கல விழியருள – பொன்
நெல்லி மழை பொழியும்!
.
இல்லறம் நல்லறமே -என
இருப்பவள் திருமகளே- அவள்
வல்லமை உடனிருந்தால்- பொன்
நெல்லி மழை பொழியும்!

 

Leave a comment