தேனிசை வழியும் அந்த
ஆண்குரலும் பெண்குரலும்
அனைவராலும் விரும்பப்படுகின்றன…
.
சோகச் சூழலையும்
இனிமையாக்கும்
ஜாலவித்தை அறிந்தவை
அக்குரல்கள்.
.
கூண்டுக் கம்பிகளைப் பிறாண்டி
வானை நோக்கிக் கூச்சலிடும்
இணைப் பறவைகளின் பேசுமொழி
செவியை வருடுகையில்
துயரம் மறந்துபோகும்.
.
பரந்த வானை நோக்கிக் கதறும்
பறவைகளின் எச்சங்கள்
கம்பிக் கூண்டில் அவ்வப்போது
சுத்தம் செய்யப்படுகின்றன.
.
கிள்ளைமொழிப் பறவைகளுக்கு
மறவாமல் தண்ணீரும் வைக்கும்
கருணை மிகுந்தவர்கள்
மனிதர்கள்!
.
மரக்கிளையில் பற்றி நின்று
இணைப்பறவைகளின்
தீவனக் கிண்ணத்தை
ஓரக்கண்ணால் பார்க்கிறது
அண்டங்காக்கை.
.
கூண்டுக்குள்
நித்தமும் நடக்கிறது
இசைக் கச்சேரி.
.
கீ கீ கீ கீ கீ கீ …….
.
.
Leave a comment